புதன், 29 ஜூலை, 2015

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது, ஆனால் புசிக்க ஒன்றும் இல்லாத போது....


      கடந்த ஜூலை 2 ஆம் தேதி மதியம் வயநாடு நூல்புழா பஞ்சாயத்தில் குற்றிச்சாடு கிராமத்தைச் சேர்ந்த 23 வயதுள்ள பாபுராஜ் காட்டினுள் விறகு சேகரிக்கப் போயிருக்கின்றார். இரவாகியும் திரும்பாது போக அவரைப் பல இடங்களில்  தேடியும் காணவில்லை. மறுநாள் தேடிச் சென்றவர்கள் கண்டதோ அவரது தலை பாகம் மட்டும். புலி அவரது உடல் பாகம் முழுவதும் தின்றுவிட்டிருந்தது. 

கடந்த ஃபெப்ருவரி 9 ஆம் தேதி இதே பஞ்சாயத்தைச் சேர்ந்த மூக்குத்திக் குன்று புத்தூரைச் சேர்ந்த 62 வயதுள்ள பாஸ்கரனைக் கொன்று தின்று இருந்த்து. நான்கு தின்ங்களுக்குப் பிறகு அங்கிருந்து 2 கிமீ தொலைவிலுள்ள நீலகிரி மாவட்டம் பாட்ட வயலில் உள்ள தேயிலைத் தோட்ட்த்தில் வேலை செய்து கொண்டிருந்த 32 வயதுள்ள மகாலட்சுமியையும் கொன்றதால், ஃபெப்ருவரி 18 ஆம் தேதி தமிழ்நாட்டு வனவிலாகாவினர் அப்புலியைச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு இப்போது இதோ மீண்டும் வேறு ஒரு புலி மனிதர்களைக் கொல்லத் தொடங்கி இருக்கிறது.  இப்புலியும் அதிகம் தாமதியாமல் கொல்லப்படும்தான். மீண்டும் சில மாதங்களுக்குப் பின் வேறு ஒரு புலி தென்படலாம். நூல்புழையைச் சேந்த ஏதேனும் ஒரு மனிதர் அதற்கு உணவான பின் அதுவும் கொல்லப்படலாம். இது தொடர்கதையாக முதுமலைக் காடுகளில் புலிகள் இல்லை என்ற நிலை நாளடைவில் ஏற்படலாம். 

Belinda wright

      “வயநாடு மாவட்டத்தில், உள்காடுகளில் புலிகள் வாழும் இடங்களில் ஏற்படும் மனித நடமாட்டம், புலிகளை அங்கிருந்து வேறு இடம் தேடிச் செல்ல வைக்கிறது. இதற்குக் காரணமாகிறவர்கள் வேறு யாருமல்ல அங்கு சுற்றுலா விடுதிகள் நடத்துபவர்களே! இது இங்குமட்டுமல்ல.  வட இந்தியக் காடுகளிலும் நடக்கும் ஒன்றுதான்.” சில நாட்களுக்கு முன் பாலக்காட்டில் வனவிலங்குகளின் தோல் மற்றும் அவையவங்கள் கடத்தல் பற்றிய தன் அனுபவங்களின் அடிப்படையில் ஒரு வகுப்பு கேரள காவல்துறை அதிகாரிகளுக்கு எடுக்க வந்த பெலிண்டா ரைட்டின் வார்த்தைகள் தான் இது. 

லாப நோக்குள்ள சிலருக்கு அதிக லாபம் கிடைக்க அவர்கள் செய்யும் இது போன்ற தவறுகளுக்கு பலியாடாவது வன விலங்குகளும் வனத்தைச் சார்ந்த இடங்களில் வாழும் பாவம் மனிதர்களும்.  உண்மையான இக்காரணம் உலகம் அறியாமல் இருக்க அவர்களது லாபத்தின் ஒருவிகிதம் அரசியல்வாதிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் கிடைப்பதுதான்.  காட்டிலிருந்து நாடேறும் புலிகளுக்கு அதற்கான காரணத்தை நம்மிடம் சொல்ல முடியாவிட்டாலும் அவர்கள் சார்பில் பெலிண்டா சொல்வதை நாம் உதாசீனப்படுத்த முடியாதுதானே.

      புலிகள் தினமாகக் கொண்டாடப்படும் இன்று (29/7/2015) உலகப் புகழ் பெற்ற எம்மி அவார்ட் உள்ளிட்ட 14ற்கும் மேலான விருதுகள், புலி மற்றும் யானை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க காரணமானதால், பெற்றவர்தான் பெலிண்டா ரைட்.  1953ல் கல்கத்தாவில் பிறந்து இப்போது டெல்லியில் வாழும் இங்கிலாந்தைச் சேர்ந்த இவரது தாய் ஆனி ரைட் உயர்ந்த வன இலாகா அதிகரியாக இருந்தவர்.  நோய்வாய்ப்பட்ட, விபத்துக்குள்ளான  வன விலங்குகளைப் பாதுகாக்க சிறிய மிருகக் காட்சிச்சாலை போன்ற ஒரு மீட்புப் புகலிடம் (Recue home) அவரது வீட்டிலிருந்தது.  அதனால், சிறு வயதுமுதலேயே வன விலங்குகளுடன் பழகும் வாய்ப்பைப் பெற்ற அவர் தனது 20 வது வயதில் நேஷனல் ஜியாக்ரஃபி சானலில் ஃபோட்டோ கிராஃபர் ஆனார்.  அன்றிலிருந்து வன விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டவர் பெலிண்டா ரைட்.

      1973ல் ப்ராஜக்ட் டைகர் தொடங்கப்பட்டது.  இந்தியா முழுவதும் உள்ள தேசிய மிருகமான புலிகளை மட்டுமல்ல, எல்லா வனவிலங்குகளுக்கும் தேவையான பாதுகாப்பளிக்க அது காரணமானது.  அது போல் 1994 ல் WPSI ஐ (Wild life protection society of India) உருவாக்கியவர் பெலிண்டா ரைட்.  எனவே, அவரது வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆகவேண்டும்.

வனவிலங்குகள் நாடேறி மனிதர்களைத் தாக்கக் காரணம் சமீபத்தில் மிகச் சிறிய அளவில் வனவிலங்குகளின் எண்ணிக்கை கூடியது மட்டுமல்ல, வனவிலங்குகள் வாழும் காட்டின் உட்பகுதியில் மனித நடமாட்டம் அதிகமாவதும் அதற்கான ஒரு முக்கியமான காரணம் எனில், அதற்குக் காரணமாகின்றவர்கள் கஞ்சா போன்ற போதைச் செடிகள் தோட்டம் உருவாக்குபவர்களானாலும் சரி, வனவிலங்குகளின் தோல் மற்றும் உறுப்புகளைக் கட்த்துபவர்களானாலும் சரி, சந்தன மரங்களை வெட்டச் செல்பவர்களானாலும் சரி, சுற்றுலாவின் பெயரில் ரிசார்ட்டுகள் கட்டுகிறேன் பேர்வழி என்று  உட்காடுகளுக்குச் சென்று வனவிலங்குகளுக்கு இடையூறு செய்பவர்களானாலும் சரி அவர்களுக்கு எத்தனை பண பலமும், படை பலமும் அரசியல் செல்வாக்கும் இருந்தாலும் சரி, அவர்களை அங்கிருந்து விரட்டி வனப்பகுதிகளில் வன விலங்குகள் வாழ வழி காண்பதுடன், வனத்தை ஒட்டிய பகுதிகளில் வாழும் மனிதர்களும் வனவிலங்குகளின் தாக்குதலுக்கு ஆளாகாமலும் தடுக்க வேண்டும்.



வியாபம் போன்ற சம்பவங்கள் லஞ்சமும் ஊழலும் இந்தியாவெங்கும் எவ்வளவு ஆழத்தில் வேரூன்றி இருக்கிறது என்பதை வெளிப்படுத்தி இருப்பது போல் இப்போது காட்டில் வாழ வேண்டிய புலியும் பிற வன விலங்குகளும் நாடேறக் காரணமும் லஞ்சமும் ஊழலுமாகத்தான் இருக்கும். கடமை தவறிய, பணம் பெற்று வனத்தின் புனிதத் தன்மையைக் குலைத்த அக்கயவர்கள் யாரென்று கண்டறிய வேண்டும்.  அப்படிப் பயிரை மேயும் வேலிகளையும் பிடுங்கி எறிய வேண்டும்.  அதைச் செய்யாமல் மனிதர்களைத் தாக்கும் வனவிலங்குகள் ஒவ்வொன்றையும் கொன்று குவித்துக் கொண்டிருந்தால், மிருகங்கள் மட்டுமல்ல காடுகளும் இல்லாத நாட்டில் நாம் வசிக்க வேண்டியிருக்கும்.  அப்படிப்பட்ட நாடு பாலைவனமாக மாறி இறுதியில் மனித இனத்திற்கே வாழத் தகுதி இல்லாத இடமாகிவிடும்.  அப்படி ஏதும் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் நாம் ஒவ்வொருவருவரும் இதற்கு எதிராகக் குரல் கொடுப்போம்.  தட்டுங்கள் திறக்கப்படும் என்பது உண்மையாகும் வரை!

படங்கள்: நன்றி இணையம்
(கீதா இன்று பயணம் மேற்கொள்ள இருப்பதால் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை  வலைப்பக்கம் வருவது சற்று குறைவாக இருக்கலாம்.  இடையிடையில் வர முயற்சிக்கின்றோம். )

திங்கள், 27 ஜூலை, 2015

குரலை விழுங்கிய புகைப் பூஞ்சுருளிற்கு (சிகரெட்டிற்கு) எதிராக மௌன யுத்தம் செய்யும் கரீம்

Image result for smoking and larynx cancerImage result for smoking and larynx cancer
Record your voice for loved ones while you still can
படங்கள் இணையத்திலிருந்து
    சில நாட்களுக்கு முன் எர்ணாகுளம் சென்ற நான் நண்பர் ரீகனுடன், எடப்பள்ளி டோல்(Toll) என்று அழைக்கப்படும் இடத்திலுள்ள ஒரு டிடிபி மையத்தில் எங்கள் வேலையை முடித்தபின் அருகிலிருந்த ஒரு சிற்றுண்டிச் சாலையில் தேநீர் அருந்தியபின் வெளியே வந்தேன். சிறிது நடந்த நான் திரும்பிப் பார்த்த போது ரீகனைக் காணவில்லை. திரும்பி நடந்த நான் சிற்றுண்டிச் சாலையின் இடப்புறமுள்ள  மாடிப்படிகளில், படிகள் இல்லாத பகுதியில் நின்று அவர் புகைப்பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் அங்கேயே நின்றுவிட்டேன். பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம் விதிக்கப்படும் என்பதால், ஒரு ஓரத்தில் சுற்று முற்றும் பார்த்து பயந்து கொண்டே புகைப்பது வழக்கமாகிவிட்டது

அப்படி அவர் புகை பிடித்துக் கொண்டிருந்த போது, சாலையின் மறுபுறம் ஒரு வித்தியாசமான மனிதர் என் கண்ணில் பட்டார். முழுக்கைச் சட்டையும், கால்சராயும், ஷூவும் அணிந்து, ஒரு கறுப்பு கலர் பெட்டியைக் கையில் பிடித்துக் கொண்டு, தலையில் தொப்பியுடன், கழுத்தைச் சுற்றி ஒரு கைக்குட்டையைக் கட்டியிருந்த அவர், சாலையைக் கடந்து நான் நின்ற பகுதிக்கு வர முயன்று கொண்டிருந்தார்.

பெருநகர்(மெட்ரோ) ரயில் பாலம் கட்டும் வேலை நடப்பதால், அங்கு இரண்டு, மூன்று காவலர்கள் வாகனங்களின் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இடையில் கிடைத்த ஒரு சிறு இடைவெளியில், ஓரிருவருடன் அவரும் வேகமாக நடந்து இப்பகுதிக்கு வந்துவிட்டார். அவர் கண்கள் இடையிடையே மாடிப்படிகளைக் கவனித்ததால், ஒரு வேளை மேல்மாடியில் உள்ள ஏதேனும் ஒரு அலுவலகத்திற்குப் போவார் போலிருக்கிறது என்ற என் ஊகத்தை உறுதிப்படுத்தும் வகையில் வேகமாக மாடிப்படிகளை நோக்கி நடந்தார். ஆனால், படிகளில் ஏறாமல், ரீகனின் அருகே சென்று, ரீகனைப் பார்த்து மிகவும் வருத்தத்துடன், ஒரு துண்டறிக்கையைக் கையில் கொடுத்தார்.

வாசித்த ரீகன் உடனே தன் கையிலிருந்த, பாதியாகியிருந்த  சிகரெட்டைக் கீழே போட்டு மிதித்தார்.  வாசித்து முடித்த அவர் அதிர்ச்சியுடனும், அதிசயத்துடனும் அவரைப் பார்க்கவும் செய்தார்.  வந்த நபர் மெதுவாகத் தன் கழுத்தில் கட்டியிருந்த கைக்குட்டையை உயர்த்தி, கழுத்தினுள்ளிருந்து வெளியே எட்டிப்பார்க்கும் ஒரு சிறிய குழாயைக் காட்டி சத்தமில்லாமல் சைகையால் தான் அதிகமாகக் குடித்த சிகரெட்டால் இப்படித் தனக்கு நேர்ந்தது என்றும், புகை பிடிக்க வேண்டாம் என்றார். பின்னர் துண்டறிக்கையில் ஒரு பகுதியில் விரலைச் சுட்டி, முகவரியைக் காட்டித் தனக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று சைகையால் சொல்லிவிட்டுத் தலையாட்டிக் கொண்டே வேகமாக நடந்து போய்விட்டார்.

      உடனே ரீகனின் கையிலிருந்த அந்த துண்டறிக்கையை வாங்கி நான் வாசிக்கத் தொடங்கினேன். “நண்பரே நீங்கள் புகைப்பிடிப்பதைக் கண்டேன். அதிகமாகப் புகை பிடித்ததால் கான்சர் வந்து, குரல்வளை” - “லாரிங்க்ஸ்” (Larynx) நீக்கம் செய்யப்பட்டதால் பேசும் திறனை இழந்தவன் நான். தயவு செய்து நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை இன்றோடு நிறுத்த வேண்டும். புகைப்பிடிக்க நீங்கள் செலவாக்கும் பணத்தைச் சேமித்து வைத்து வீட்டுச் செலவுக்குப் பயன்படுத்த, ஒரு உண்டியலை நான் இலவசமாக உங்கள் வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ அனுப்பித் தருகின்றேன். நீங்கள் அதற்குத் தயார் எனில், ஒரு தபால் அட்டையில் தங்கள் முகவரியை எழுதிக் கீழ்காணும் என் முகவரிக்கு அனுப்பவும்.

இப்படிக்கு,
டி எஸ் அப்துல் கரீம், துண்ட்த்தில் ஹவுஸ், நார்த் விடாக்குழா, தாய்க்காட்டுக்கரை, ஆலுவா, 683106.

நான் வாசித்து முடித்ததும், தேநீர் அருந்திவிட்டு வெளியே வந்த சில, பாரம் ஏற்றும் பணி புரிபவர்களில் ஒருவர் சிரித்தபடியே எங்கள் அருகில் வந்தார்.  அவரிடமிருந்து கிடைத்த, கரீமைப் பற்றிய தகவல்கள் எங்களை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது.

பள்ளி மாணவர்களுக்காக தேசீய அளவில் நடத்தப்பட்ட ஒரு பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற அப்துல் கரீம் முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கையிலிருந்து பரிசு பெற்றவராம். கல்லூரிக் காலங்களில் எப்போதோ தொற்றிக் கொண்ட புகைப்பிடிக்கும் பழக்கம் அவரை அதற்கு அடிமையாக்கியிருக்கிறது. 1966ல் எச்எம்டி நிறுவனத்தில் கணக்காளராகப் பதவியேற்ற அவர் தினமும் 10 பாக்கெட் சிகரெட் பிடித்தாராம். விளைவோ அவரது 50 வது வயதில் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு சிகிச்சை பெறப் போன போது மருத்துவர் சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்தே போனாராம்.

குரல்வளையை அப்புறப்படுத்த வேண்டும்.  அதன் பின் பேச முடியாது.  அப்புறப்படுத்தாவிடில் உயிருக்கே ஆபத்து என்பதுதான் அது. வேறு வழியின்றி குரல்வளையை - லாரிங்க்சை அப்புறப்படுத்தும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பேச்சாற்றல் இழந்த அவர், எழுதிக் காட்டி மற்றவர்களுடன் தன் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளும் நிலைக்கு வந்தார். நுரையீரலுக்குத் தேவையான சுவாசக் காற்றைச் சுவாசிக்க கழுத்தில் ஒரு ஓட்டையிட்டு அதில் ஒரு குழாயைப் பொருத்தி இருக்கிறார்கள். அதன் வழியாக தூசி புகாமல் இருக்கத்தான் தன் கழுத்தைச் சுற்றி ஒரு கைக்குட்டையைக் கட்டி இருக்கிறார்.  அவரதுக் குரலைக் கொன்ற புகைப் பிடிக்கும் பழக்கத்திலிருந்து மற்றவர்களைக் காக்கத் தனிமனிதனாக கையில் எச்சரிக்கும் துண்டறிக்கையுடன், தினமும் ஏறத்தாழ 25 கிலோமீட்டர் நடந்து, புகைப்பிடிப்பவர்களைக் கண்டு துண்டறிக்கையைக் கொடுத்து, தனக்கு நேர்ந்த துயரத்தைச் சைகையால் விவரித்து வருகிறார்.

CRUSADE AGAINST SMOKING எனும் பொது நல இயக்கத்தையும் தொடங்கியிருக்கிறார். இதுஅரை 75,685 நபர்களை நேரடியாக் கண்டு நோட்டீஸ் கொடுத்து அவர்களை புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுவிக்க முயற்சிகள் எடுத்திருக்கிறார்.  அதில், 11,895 பேருக்கு சிகரெட்டிற்குச் செலவிடும் பணத்தைச் சேமிக்க உண்டியலை அனுப்பிக் கொடுத்திருக்கிறார். அதில் 5000 பேர் முழுவதுமாகப் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டார்கள். 7500 பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் குறைத்து விட்டார்கள்.  இதற்காக அப்துல் கரீம் ஏறக்குறைய 450 சிறு புத்தகங்களும், சிற்றேடுகளும் பிரசுரித்து வினியோகித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, புகை பிடிக்கும் பழக்கத்தின் தீமைகளை நான்கு குறும்படங்களாகப் படம் பிடித்து இலவசமாகப் பள்ளிகளில் காட்டியும் இருக்கிறார்.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்று அவரை எள்ளி நகையாடுபவர்களும் உண்டு.  அதை எல்லாம் பொருட்படுத்தாமல், தனக்கு நேர்ந்த துயரம் யாருக்கும் ஏற்படக் கூடாது என்று நினைக்கும் அவரைப் பாராட்டியே தீர வேண்டும்.  அதனால், அவர் செய்யும் இச்சேவை போற்றுதற்குரியதே. கரீம் அவர்களது பாதிப்பால் ரீகன் புகைப் பிடிக்கும் பழக்கத்தை முழுமையாக விட வாய்ப்பில்லை என்றாலும், குறைந்த பட்சம் சிகரெட்டுகளின் எண்ணிக்கையேனும் குறைத்துக் கொள்ளுவார் என்று தோன்றுகின்றது. எல்லாம் வல்ல இறைவன், திரு அப்துல் கரீமுக்கு ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுத்து அவரது இந்த சிகரெட்டுக்கு எதிரான மௌன யுத்தத்தை நீண்ட காலம் தொடரச் செய்வார் என்று நம்புவோம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
இந்தப் பதிவை வெளியிடும் போது இந்தத் துயரமான செய்தி அறிய......

The Vision

I climbed and climbed
Where is the peak, my Lord?
I ploughed and ploughed,
Where is the knowledge treasure, my Lord?
I sailed and sailed,
Where is the island of peace, my Lord?
Almighty, bless my nation
With vision and sweat resulting into happiness
A.P.J. Abdul Kalam


எவ்வளவு ஆழமான வார்த்தைகள்! எல்லோரது மனதிலும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டிய வார்த்தைகள்! எவ்வளவு அழகான கனவு! திரு கலாம் அவர்களின் வார்த்தைகளும், கனவும் நனவாகட்டும்! அவரது ஆன்மா சாந்தியடையட்டும்! நாம் பிரார்த்திப்போம்! ஒரு நல்ல மாமனிதரை நமது நாடு இழந்த துக்கம். ஆழ்ந்த இரங்கல்கள்! 

சனி, 25 ஜூலை, 2015

ஷோபா மிஸ்ஸினால் கரைந்து போன கோபம்


      கார்த்திக் சரவணன் அவர்கள் எழுதிய கதையைத் தொடர்ந்த மூங்கில் காற்று முரளிதரன் அவர்களின் தளத்தில், மதுரைத் தமிழன் கதையைத் தொடர அழைக்க, அவர்களில் ஒருவராக நாங்களும் இருக்க, ஏற்கனவே நாங்கள் யோசித்த இரு வகை முடிவுகள் வெளியிடப்பட, பின்னர் இதோ எங்கள் வகைக் கதை தொடர்கின்றது. எல்லோருமே மிகவும் நன்றாக எழுதி முடித்திருந்தார்கள்.  அவர்களது சுட்டிகள் இதோ கீழே.  எங்களுக்கும் அழைப்பு விடுத்து, சிந்திக்க வைத்துக் கதை புனைய வைத்த மதுரைத் தமிழனுக்கு மிக்க நன்றி! மதுரைத் தமிழனும் எழுதியிருப்பதை இப்போதுதான் பார்த்தோம் அந்தச் சுட்டியும் இங்கு இப்போது சேர்த்துள்ளோம்...


ராஜேஷ் வேகமாக கோவைப்பழமாகச் சிவந்து கோபமேறிய கண்களுடன்.....நில்லு நில்லு என்னது இது கோவைப்பழமாகச் சிவந்த கண்கள் அப்படி, இப்படினுட்டு...கேப்டனின் கண்கள் போலனு சொல்லு....ஓகே.....கேப்டனின் சிவந்த கண்கள் போல – கோபத்துடன் அந்தப் பள்ளியின் ஆசிரியர்களின் அறையை நோக்கி நடந்தான். அவன் அந்த அறையை அடைவதற்குள் காரணத்தைச் சொல்லி விடுகின்றேன். வேறு ஒன்றும் இல்லை இப்போதெல்லாம் பள்ளியில் குழந்தையை ஒரு சின்னத் தட்டு தட்டினாலே ஆக்ரோஷத்துடன் வந்து விடுகின்றார்கள் இந்தப் பெற்றோர்கள்.  அப்படியான பெற்றோர்களில் ஒருவராய், பொறுப்பான தந்தையாய் நடந்தான். ஆசிரியர்களின் அறை வாசலில் நிழலாடுவதைக் கண்டதும், அங்கு பேசிக் கொண்டிருந்த ஆசிரியைகளில் ஒருவர் வாசலை நோக்க, அவர் அருகில் வந்து என்ன என்று கேட்கும் முன்னரேயே நம்ம ராஜேஷ்,

      “ஷோபா மிஸ் இருக்காங்களா?” என்ற கேள்வியிலேயே சிறிது கடுமை தெரிந்தது.

      “இருக்காங்க.  க்ளாஸ்ல. இப்ப பீரியட் முடிஞ்சு வர்ற நேரம்தான் சார்.  கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.” என்று பதிலுரைத்து விட்டு, மீண்டும் தனது பேச்சைச் தொடர்ந்த அவர்,

“ஹேய் இது தீபாவோட அப்பால்ல? என்று கேட்ட மற்றொரு ஆசிரியைக்கு, க்ளுக் என்று சிரித்துக் கொண்டே, “ம்ம் ஷோபா இன்னிகுச் செமயா மாட்டிக்கிட்டா இவர்கிட்ட.. எற்கனவே கொஞ்சம் டக்குனு கோபப்படுறவரு....ஆளு செம கடுப்புல இருக்காப்புல தெரியுது..” மீண்டும் சிரிப்பு அங்கு.

வெயிட் பண்ணக் கூட பொறுமை இல்லாமல் அங்குமிங்கும் கோபத்துடன் குட்டி போட்ட பூனை போல நடந்து கொண்டிருந்தான் ராஜேஷ்.  பின்னே, அந்தக் காத்திருக்கும் நேரத்தில் கோபம் குறைந்துவிட்டால் மிஸ்ஸுடன் எப்படிச் சண்டை போட முடியும்!

அதோ ஷோபா மிஸ் க்ளாஸ் முடிந்து வந்துவிட்டார். நல்ல மிடுக்கான நடை.  பார்த்தவுடனேயே மரியாதை கொடுக்கும் தோற்றம். கண்களில் கருணை, உதட்டில் புன்னகையுடன் வருபவரா என் மகளை அடித்தார்? தனது கோபம், மண்ணெண்ணை ஸ்டவ் அணைத்ததும் புஸ்ஸென்று மெதுவாகக் குறையுமே அது போல, குறைவதை உணர்ந்தான்.  இருந்தாலும் மீசையில் மண் ஒட்டக் கூடாதே! ம்ம் இல்லை அடித்தார்தான்.  என் மகள் குழந்தை. குழந்தை பொய் சொல்லாது. மனைவியிடமும் வேற டீச்சரே சொல்லி என்னிடம் சொல்லிவிடக் கூடாது என்றும் சொல்லி இருக்கிறாரே...ம்ம்ம்...என்று நினைத்துத் தன் கோபத்திற்கு ஸ்ருதி சேர்த்துக் கொண்டான்.

 “ஹலோ சார் எப்படி இருக்கீங்க? என்ன இந்தப் பக்கம்?” என்று மிகவும் யதார்த்தமாகக் கேட்டுக் கொண்டே வரவும், ஒரு நிமிடம் அந்தக் கம்பீரக் குரலில் ஆடித்தான் போனான் ராஜேஷ்.. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு...நேரடியாகவே தான் வந்த விஷயத்திற்கு வந்தான்.

“என் மகளை ஏன் அடிச்சீங்க? அதைக் கேட்டுட்டு போகத்தான் வந்தேன்”

“ஓ! அதுவா, நான் ஒண்ணும் அடிக்கலையே சார்.  அவ இடம் மாறி உக்காந்த குறும்பை நினைச்சு சிரிச்சு அவளை ஜஸ்ட் லைக் தாட் கன்னத்துல தட்டி, இனி மாறி உக்காரக் கூடாதுனு மட்டும்தான் சொன்னேன்...”

“இல்ல டீச்சர் நீங்க அடிச்சிருக்கீங்க..சின்னக் குழந்தை பொய் சொல்லாது. நான் என் பொண்ணை இது வரை அடிச்சது... ஏன் திட்டினது கூடக் கிடையாது...நீங்க எப்படி என் பொண்ணை அடிக்கலாம்..”

“சார் நீங்க நினைக்கற மாதிரி நான் ஒண்ணும் அடிக்கலை அவளை. அவளே அதை மறந்திருப்பா சார்” என்று மிகவும் பணிவுடன் சொன்னார்.

“அவ மனசு பாதிக்கும்ல? டீச்சரத்தானே பிள்ளைங்க ரோல்மாடலா நினைக்கறாங்க. அப்படி இருக்க, நீங்க அவளை அடிச்சது தப்பு. நியாயப்படுத்த ட்ரை பண்ணாதீங்க. நீங்க எங்களக் கூப்பிட்டு சொல்லி இருக்கணும். அதை விட்டுட்டு அவள நீங்க எப்படி அடிக்கலாம்? நீங்க சைல்ட் சைக்காலஜி படிச்சிருப்பீங்களே டீச்சர் ட்ரெய்னிங்கல....நீங்க பண்ணினது தப்பு. நான் ஸ்கூல் பிரின்சிப்பால், கரஸ்பாண்டன்ட்கிட்ட கம்ப்ளெய்ன்ட் கொடுக்கத்தான் போறேன்.”

“நீங்க சொல்றதுல நியாயம் இருந்தா கண்டிப்பா நான் அதை ஏத்துக்குவேன். நான் வேற ஏதோ கோபத்துலயோ, உணர்ச்சியோடயோ உங்க மகளை அடிச்சிருந்தா என் தப்புதான். ஆனா, நான் அப்படி எதுவும் பண்ணலையே சார். இப்படிக் க்ளாஸ் ரூம்ல நடக்கற சின்னச் சின்ன விஷயத்துக்கு எல்லாத்துக்கும் உங்கள கூப்பிட்டுச் சொல்லணும்னா ஸ்கூல்ல எப்பவும் பேரன்ட்ஸ்-டீச்சர்ஸ் மீட்டிங்க் கூட்டமாத்தான் இருக்கும். ஸ்கூல் நடத்தவே முடியாதுங்க. அப்புறம் நாங்க டீச்சர்ஸ் எதுக்கு சார்? பேரன்ட்ஸும் டீச்சர்ஸ் ஆங்கிள்ல கொஞ்சம் புரிஞ்சுக்கங்க. உங்களுக்கு ஒரு குழந்தை..... இல்லைனா 2 குழந்தைங்க. ஆனா, இங்க வர்ற அத்தனை குழந்தைகளுமே எங்க குழந்தைங்கதான். நாங்க டீச்சர்ஸ் ஒரே சமயத்துல எத்தனை குழந்தைங்கள மேனேஜ் பண்ணனும் பாருங்க. உங்கள் ரெண்டு குழந்தைங்களுக்குள்ள சண்டை வந்துச்சுனா எந்தக் குழந்தை அதிகமா தப்பு செஞ்சுச்சோ அந்தக் குழந்தையக் கண்டிக்க மாட்டீங்களா சார்? அது மாதிரிதான் சார் இதுவும். நானும் ஒரு அம்மாதான்.  ஸோ உங்க ஆங்கிள்ல இருந்தும் திங்க் பண்ண முடியும் சார். எனக்கும் சைல்ட் சைக்காலஜி தெரியும். பேரன்ட்ஸும் கொஞ்சம் சைல்ட் சைக்காலஜி தெரிஞ்சுகிட்டு பிள்ளைங்கள ஓவரா செல்லம் கொடுக்காம, அன்பானக் கண்டிப்போட வளர்க்கணும் சார். இதுக்கு அப்புறமும் நீங்க கம்ப்ளெயின்ட் கொடுக்கணும்னு நீங்க நினைச்சீங்கனா கொடுத்துக்கங்க சார்.” என்று மென்மையாக ஆனால் அதே சமயம் அழுத்தமாகச் சொல்லிவிட்டு அதே மிடுக்குடன் நடந்து சென்றார்.

ராஜேஷிற்கு என்ன சொல்லுவது என்று தெரியாமல் பேச்சிழந்து நின்றான். டீச்சர் சொல்லுவதிலும் நியாயம் இருந்ததாகத் தெரிந்தது.

மாலை. ராஜேஷ் வீட்டிற்குள் நுழையும் போதே மகள், “என்னப்பா எங்க டீச்சர்கிட்ட செம பல்பு வாங்கினியாப்பா? என்னப்பா நீ? எங்க டீச்சர்கிட்டலாம் போயி சண்டை போடுற?  நாளைக்கு டீச்சர் என்னப் பத்தி என்ன நினைப்பாங்க?  கோள் மூட்டினு நினைப்பாங்கல்ல....என்னை பேட் கேர்ள்னு நினைச்சுருவாங்க” என்று கண்ணில் கண்ணீருடனும், கோபத்துடனும் சொல்லவும், தான் .குழந்தையின் இந்தக் கோணத்தை நினைத்துப் பார்க்கலையே என்று தன்னைத்தானே தலையில் குட்டிக் கொண்டான். “ஆமாம் பல்புதான்! ஆனா எனக்குள்ள ஒரு நல்ல வெளிச்சத்தையும் கொடுத்த பல்பு.” என்று நினைத்தவாறே தனது முன் கோபத்தையும் கைவிட முடிவெடுத்தான். 

புதன், 22 ஜூலை, 2015

யாதும் ஊர்தான், யாவரும் கேளிர்தான், புலம் பெயர்ந்த தீபனுக்கு

"யாழ் நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ் நாட்டில் என் அம்மா
சுற்றம் பிரான்போட்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ நாட்டில்
நானோ
வழிதவறி அலாஸ்கா
வந்துவிட்ட ஒட்டகம் போல்
ஒஸ்லோவில் "
--ஈழக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் 

Image result for DHEEPAN FILM
ஆண்டனிதாசன் ஏசுதாசன் எனும் சோபா சக்தி.

“தனுஷ், பசுபதி, விஜய் சேதுபதி போன்றவர்களைத் தவிர்த்து இப்படத்தில் நடிக்க ஏன் இயக்குநரான ஜாக்ஸ் ஆடியார்ட் (Jacques Audiard) என்னைத் தேர்ந்தெடுத்தார் என்று எனக்குப் புரியவில்லை.”
இப்படிச் சொன்னவர் “தீபன்” படத்தில் நாயகனாக நடித்த ஆண்டனிதாசன் ஏசுதாசன் எனும் சோபா சக்தி.
ஜாக்ஸ் ஆடியார்ட்.
“இறைவன்தான் ஆண்டனியை எனக்குக் காட்டினார்.” இதைச் சொன்னதோ கேன்ஸ் திரைப்பட விழாவில் (Festival De Cannes) ஃபார்ம் டி ஓர் (Palme d’ Or) விருது பெற்ற “தீபனின்” இயக்குநரான ஜாக்ஸ் ஆடியார்ட்.


இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து எப்படியோ ஃப்ரான்ஸ் சென்றடைந்த அனாதைகளான மூவர், கணவன், மனைவி மற்றும் மகளாக மாறி, கள்ளப் பாஸ்போர்ட் எடுத்து, அந்நாட்டில் வாழ்வதுதான் தீபனின் கதை.
உலகெங்கும் அகதிகளாய் வாழும் ஈழத் தமிழர்களைப் பற்றி எத்தனையோ திரைப்படங்கள் இதற்கு முன் வெளியாகி இருக்கின்றன.  அதில் பரிசு பெற்றவைகளும் இருக்கத்தான் செய்கின்றன.  எனினும், கேன்ஸ் திரப்பட விழாவில் விருது பெற்ற இப்படம் எல்லாவிதத்திலும் அவற்றிற்கெல்லாம் மேலே ஒரு படி போய் தனக்கென்று ஓரிடத்தை தக்க வைத்து விட்டது. 
காளீஸ்வரி ஸ்ரீநிவாசன்---க்ளாடின் வினசிதம்பே
இப்படத்தில் போலி மனைவியாக நடித்தவர் சென்னையிலுள்ள ப்ரபல நாடக நடிகையான காளீஸ்வரி ஸ்ரீநிவாசன். போலி மகளாக நடித்தவர் பாரீசில் பிறந்து வளர்ந்த, இலங்கையைச் சேர்ந்த 10 வயதுள்ள க்ளாடின் வினசிதம்பே. தீபனாக நடித்தவரோ ஆண்டனி தாசன் ஏசுதாசன் எனும் சோபா சக்தி. “கொரில்லா”, “தேசத்ரோகி”, “ம்” எனும் நாவல்கள் எழுதி இலங்கையில் தான் கண்ட, கேட்ட, அறிந்தவற்றை உலகிற்கு அறிவித்தவர். 
இலங்கையில் சமாதானம் நிலவச் செய்யச் சென்ற இந்திய ராணுவம் எனும் வேலி பயிரை மேய்ந்த கதையைச் சொல்லி எல்லோரையும் கண்கலங்கச் செய்தவர். எல்டிடியின் சிறுவர் பட்டாளத்தில் இருந்தவர்.  பின்பு எப்போதோ புலிகள் தலைவர் பிரபாகரனுடன் முரண்பாடு ஏற்பட எல்டிடியிலிருந்து விலகி வெளியேறியவர். உடனே கைது செய்யப்பட்டு சிறையிலிடப்பட்டவர்.
தனது 29 வது வயதில் எப்படியோ இலங்கையிலிருந்து தாய்லாந்து வந்து சேர்ந்தவர்.  4 ஆண்டுகள் அங்கு அகதியாய் வாழ்ந்தவர்.  அதன் பின் அங்கிருந்து கள்ள பாஸ்போர்டில் ஃப்ரான்ஸை அடைந்தவர்.  பாரீஸ் உணவகங்களிலும், பிற இடங்களிலும் எல்லா வித வேலைகளையும் செய்து வாழ்ந்தவர். 
கடந்த இரண்டு வருடங்களாக “தீபன்” திரைப்படத்தில் நடித்ததால் கிடைத்த பணத்தில் வேலைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லாமல் வாழ்ந்தாலும், மீண்டும் முன் போல் பாரீசில் உழைத்து வாழத் தயாராக இருப்பவர்.  அப்படி தீபனாக அப்படத்தில் நடிக்கச் சென்றவர் அல்ல ஆண்டனி;  எல்லா விதத்திலும் தீபனாக அப்படத்தில் வாழச் சென்றவர். அதனால்தான் ஒரு வேளை இயக்குநரான ஜாக்ஸ் ஆடியார்ட்  இறைவன் தான் ஆருக்கு ஆண்டனியைக் காட்டினார் என்று சொன்னாரோ என்னவோ?
எப்படியிருப்பினும், உலகெங்கும் சிதறிக் கிடக்கும் நம் தமிழ் குடும்பத்தினரின் கதையைச் சொன்ன ஜாக்குவத் ஒடியார்ட் போற்றுதற்குரியவரே.  அவரது “தீபனுக்குக்” கிடைத்த இந்தப் பரிசு, உலகெங்கும் உள்ள புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல. உலகத் தமிழ் இனத்திற்கே கிடைத்த பரிசுதான்.
Image result for DHEEPAN FILM
ஜாக்ஸ் ஆடியார்ட்  கங்கிராட்ஸ்! தாங்க்ஸ் எ லாட்!

செவ்வாய், 21 ஜூலை, 2015

கண்டெனன் பதிவர்கள் போற்றும் ஜிஎம்பியைக் கண்களால்

      பதிவர்களாகிய நாமெல்லாம் பழகிய மிகக் குறைந்த கால அளவில்,  ஏதோ முன் ஜென்ம பந்தம் இருப்பது போல் நெருங்கிவிடக் காரணம்தான் என்ன என்று பலமுறை நான் வியந்ததுண்டு. நம்மிடையே நிலவும் ஒத்த சிந்தனைகள் இதற்கு ஒருவேளை காரணமாகலாம். மென்மேலும் நம் ஒவ்வொருவரையும் எழுதத் தூண்டும் பின்னூட்டங்களாம் அகமகிழ்ந்த பாராட்டுகளும், நம்மைச் செம்மைப் படுத்த உதவும் கருத்துகளும் ஒரு வேளை காரணமாகலாம். வரிகளுக்கிடையிலும், வரிகள் வந்த வழியாகவும், எழுதியவரின் மனதுக்குள் நுழையும் வித்தை கற்ற வித்தகர்களாம் பதிவர்கள், ஒவ்வொருவரது பதிவின் வழியாக எல்லா பதிவர்களின் உள்ளம் நுழைந்தும், நுழைந்த உள்ளத்தவர்களை தம் மனதுள்ளும் நுழைய வைத்ததும் ஒரு வேளை இதற்குக் காரணமாகலாம். 

அப்படி, பதிவர்கள் ஆகிய நாமெல்லோரும் நம் பதிவுகளின் உதவியால் நம் பதிவர் நண்பர்கள் மனதில் ஆழமாகப் பதிந்தவர்கள்தான்.  அதே போல் நம் பதிவர் நண்பர்களின் பதிவுகளின் தாக்கத்தால் அவர்கள் ஒவ்வொருவரையும் நம் மனதில் பதியச் செய்தவர்களும்தான். 

அப்படிப்பட நம் பதிவுலக நண்பர்களுடன் தொலை பேசியில் பேச வாய்ப்புக் கிடைக்கும் போது நாம் பெறும் இன்பம் அலாதிதான்.  அவர்களை நேரில் கண்டு பேசும் போது உண்டாகும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் போதாது. அதை அனுபவித்துத்தான் அறிய வேண்டும்.  அம்மகிழ்ச்சியை இடையிடையே நேரம் கிடைக்கும் போதெல்லாம் அசை போட்டு இன்ப வெள்ளத்தில் நீராடும் பாக்கியம் பதிவர் நண்பர்களான நமக்கு மட்டுமே சாதிக்கின்ற ஒன்றுதானே. 

அப்படி, நினைத்தாலே இனிக்கும் நேரங்கள் தான் கவியாழி, குடந்தையூரார், இமயத்தலைவன், வாத்தியார், அரசன், சீனு, ஆவி, டிடி, கார்த்திக் சரவணன், ரூபக் ராம், மெட்ராஸ்பவன் ஏஜி சிவக்குமார், செல்வின், விசு, அன்பேசிவம் சக்தி, முத்துநிலவன் ஐயா, மதுரைத் தமிழன், மூங்கில்காற்று முரளிதரன், திருப்பதி மகேஷ், பேராசிரியர் தருமி, வேலூர் ராமன், திவான் போன்றவர்களைச் சந்தித்த நேரங்கள்.

ஆனால், கடந்த ஆண்டு மதுரையில் நடந்த பதிவர் விழாவில் பங்கெடுக்கவிருந்த அனைவரையும் காண ஆவலுடன் காத்திருந்தும், இறைவன் ஏனோ இறுதி நேரத்தில் செல்லவியலாத சூழலை ஏற்படுத்தி ஏமாற்றத்தைத் தந்தார். விழாவின் போது சந்திக்க முடியாமல் போன சிலரது பெயர்களைக் குறிப்பிட்ட ஜிஎம்பி சார் எங்கள் பெயரையும் குறிப்பிட்ட போது, மனது ஒரே நேரத்தில் துள்ளிக் குதிக்கவும், துவண்டு போகவும் செய்தது. 

அதற்கு முன்பே பங்களூரில் உள்ள ஒரு பள்ளியில் எங்களது ஒரு குறும்படம் இட்டு மாணவ, மாணவியருடன் ஆங்கிலத்தில் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருந்தார்.  அதுவும் நடக்கவில்லை.

அப்படி, இரண்டு முறை அவரைச் சந்திக்க முடியாத சூழலை முறியடித்து, அவரைக் கடந்த கோடை விடுமுறையின் போது பங்களூர் சென்று சந்திக்க வேண்டும் எனத் தீர்மானித்திருந்தேன். அதுவும் நடக்காமல் போகவே, வருந்தி இருந்த போது ஒருநாள் காதில் தேனாய் பாய்ந்த செய்தி கீதா மூலம் வந்தது.  ஜிஎம்பி சார் பாலக்காடு வருகிறார்! ஜூலை 15, 16 தேதிகளில்!! கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல் ஒரு வாய்ப்பு!

முன்பு ஒரு பின்னூட்டத்தில், நினைவலைகள் தப்பியவர்களுக்கு பணிவிடை செய்யும் ஒரு நண்பரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஜிஎம்பி சார் பாலக்காடு வருகையின் போது அவரைச் சந்திக்கப் போவதாகவும் அப்போது அவருடன் நானும் செல்ல வேண்டும் என்று சொன்ன போது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

16.07.2015 மாலை 5.15. பாலக்காடு கபிலவஸ்து தங்கும் விடுதி. ரிசெப்ஷனிஸ்டிடம் பங்களூரிலிருந்து வந்திருக்கும் ஜிஎம் பாலசுப்ரமணியம் சாரை பார்க்க வேண்டும் என்றதும், “ரும் நம்பர் 207, இரண்டாவது தளம் என்றார்”.  உடனே இன்டெர்காமில் ஜிஎம்பி சாரைக் கூப்பிட்டு என் கையில் தர, “ஜிஎம்பி சார், நான் 207 ஆம் அறைக்கு உங்களைப் பார்க்க வந்து கொண்டிருக்கின்றேன்” என்றேன்.

“மின் ஏணி இரண்டாவது தளத்தில் நின்றதும், வெளியில் வந்து அறை எண்களைப் பார்த்துக் கொண்டே நடக்கையில் என் எதிரே ஜிஎம்பி சார்.  நேருவை நேரில் கண்டவர்; இந்திய சீனப் போருக்கு முன் சூயன் லாயின் செல்லத் தட்டைக் கன்னத்தில் பெற்றவர்; போரின் போது அதே கன்னத்தை ஆத்திரத்துடன் அடித்துக் கொண்டவர்; எத்தனையோ நாடகங்களை எழுதி இயக்கி, நடிக்கவும் செய்தவர்.  “வாழ்வின் விளிம்பில்”, எனும் அருமையான சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தின் ஆசிரியர். என்பால் அன்பும், பாசமும் கொண்டவர்; என் அன்பிற்கும், மரியாதைக்கும் உரியவர். 

கண்ட நொடியில் என்னை அறியாமல் அவரது கால்களில் தொட்டு கண்களில் ஒற்றி அவரது ஆசியைப் பெற்றுக் கொண்டேன். என்னை 207 அறைக்கு அழைத்துச் செல்ல அங்கு அவரது துணைவியார்,  அவருடன் பங்களூரிலிருந்து வந்த அவரது மைத்துனர், அவரது துணைவியார், ஜிஎம்பி சாரின் நண்பரான திரு சுந்தரேசன், அவரது துணைவியார். எல்லோருக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தார் ஜிஎம்பி சார்.


ஜிஎம்ப் சார்


திரு சுந்தரேசன், ஜிஎம்பி சார்


திரு மதுசூதனன்

திரு சுந்தரேசனைப் பார்த்ததும், எனக்கு, எங்கள் பள்ளிக்கு, மூன்று வகுப்பறைகள் உள்ளிட்ட ஒரு கட்டிடம், பள்ளி தொடங்கப்பட்ட 1982ல் கட்டித் தந்த திரு மது சூதனன் அவர்களின் முகம் நினைவிற்கு வர, அதைப் பற்றி அவரிடம் கேட்க, அவர் தான் அவரது தம்பி என்றதும், ஜிஎம்பி சார் சொன்ன நினைவலைகள் தவறியவர்களுக்காக (ALZHEIMERS) தொண்டு செய்யும் அவரது நண்பர் வேறு யாருமல்ல திரு மதுசூதனன் அவர்கள்தான் என்று உறுதியானது.  இப்படிப்பட்ட, தன்நலம் பாரா பொதுநல விரும்பிகளின் புகழ் எண் திசையும் பரவும் என்பது எவ்வளவு உண்மை! இறைவன் தன் தேவைக்கு அகிதமாகத் தரும் செல்வம், பிறரது தேவைகளுக்காகச் செலவிடப்படவேண்டியது என்பதை உணர்ந்த திரு மது அவர்களைப் போன்ற செல்வந்தர்கள் எத்தனை பேர் நம்மிடையே வாழ்கின்றார்கள்? 
Karunya Geriatric Care Centre is a unit of “ Palakkad Alzheimers’ Charitable Trust  http://www.karunyagcc.org/

பேசிக் கொண்டிருந்த போது திரு சுந்தரேசன் அவர்கள் திரு மது அவர்களைப் பற்றிச் சொன்ன ஒரு நிகழ்வு என்னை மிகவும் வியப்படைய வைத்தது. திரு மது அவர்கள் எப்போதுமே தன்னால் இயன்ற மட்டும் எல்லோருக்கும் உதவி செய்யும் பழக்கம் உடையவர்.  தன் அரபு நாட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டு இந்தியா வந்து பொதுத் தொண்டாற்றி வாழ முடிவு செய்ததால், தன் பென்ஸ் காரை போகும் முன் சர்வீஸ் செய்ய கொண்டு போன போது, சர்வீசுக்கு வரும் பென்ஸ் கார் உரிமையாளர்களுக்கு மட்டும் ஏதோ ஒரு பரிசு குலுக்கல் உண்டென்றும், வெற்றி பெற்றால் இருபது லட்சம் விலை உள்ள ஒரு கார் பரிசாகக் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இவர் தன் பெயரைச் சேர்க்க வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல் இவரது பெயரையும் பரிசுக் குலுக்கலில் சேர்த்திருக்கிறார்கள்.  அன்று இறுதி நாள்.  அடுத்த நாள் நடந்த குலுக்கலில் முதல் பரிசான அந்த ஃப்ரென்சு கார் பரிசாகக் கிடைத்திருக்கிறது.  உடனே மது அவர்கள் “இதெல்லாம் இறைவன் எனக்குத் தரவில்லை. உதவி தேவைப்படும் பலருக்கு உதவ என் கையில் தருகிறார். இதை நான் எனக்காக எடுக்கப் போவதில்லை.  உரியவர்களுக்கு பரிசுத் தொகையைப் பிரித்துக் கொடுக்கப் போகிறேன்” என்று சொல்லி இருக்கிறார். திரு மது அவர்களைப் பற்றி ஜிஎம்பி சார் விரிவாக எழுத இருக்கிறார்.

இடுகைகளைப் பற்றியும், பதிவர்களைப் பற்றியும் நீண்ட நேரம் நானும் ஜிஎம்பி சாரும் உரையாடினோம்.  அடுத்த நாள் காலை அவர் மணப்புள்ளிக்காவு கோயில் தரிசனம் முடித்து, திரு மது அவர்களின் காருண்யாவுக்கு சென்று அவரைக் கண்ட பின் ஆலத்தூர் வல்லங்கி போன்ற இடங்களுக்குச் செல்லப் போவதாகவும் சொன்னார். அதற்கு அடுத்த நாள் குருவாயூர் தரிசனம் முடித்த பின் நேராக பங்களூர் போவதாகவும் சொன்னார்.  ஏறத்தாழ இரண்டு மணி நேரம் ஜிஎம்பி சாருடன் செலவிட்ட பின் மனதில் என்றென்றும் பசுமை மாறாமல் நிலைத்திருக்கப் போகும் நினைவுகளுடன் அவரிடமிருந்து விடை பெற்றேன்.

 படங்கள் : ஜிஎம்பி சார்