வியாழன், 21 ஏப்ரல், 2016

காப்(ஃபி)பி ஆலாபனை - 2


முதல் பகுதியின் முடிவில்....

“அட! இந்த மெத்தட் கூட நல்லாருக்கே” என்று நினைத்துக் கொண்டேன்.

சரி, அந்த மெத்தட் என்னவாக இருந்திருக்கும் 
என்று யோசித்துக் கொண்டே  என்று எழுதியிருந்ததை, ஜப்பானிய மொழியில் தேர்ந்தவர், ஜப்பானியர்களை அறிந்தவர், வகுப்புகள் எடுப்பவர் தோழி அபயா அருணா மற்றும் காஃபி டாக்டரேட் ஸ்ரீராம், அந்த மெத்தட் பற்றிச் சொல்லுவார்கள் என்று நினைத்திருந்தேன். அந்த மெத்தட் ஒன்றும் பரம ரகசியம் இல்லை. இதோ...

அப்பெண்கள் ஃப்ளாஸ்கிலிருந்து சுடு நீரைச் சிறிய பீங்கான் கோப்பைகளில் ஊற்றினார்கள். குழல் போல் நீண்டு இருந்த ஓர் உறையைப் பிரித்து அதிலிருந்த பொடியைச் சுடு நீரில் கொட்டிக் கலந்தார்கள். இப்போது பலவிதமான காஃபியைச் சுவைத்துவிட்ட எனக்கு அப்போது அது ஆச்சரியமாக இருந்தது. வித்தியாசமான நல்ல சுவையான காஃபி!

“அட! இந்த மெத்தட் கூட நல்லாருக்கே” என்று நினைத்துக் கொண்டேன். எங்களுக்கும் ஆளுக்கு 5 உறைகள் கொடுத்தார்கள். எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள், அனுப்பியும் தந்தார்கள்.

அந்த மெத்தட் காஃபியின் ராகம் மனதில் ஓடிக் கொண்டிருந்ததால், வீட்டிற்குப் போனதும் அம்மாவிடம், “அம்மா, பால் பௌடர், இன்ஸ்டன்ட் காஃபி பொடி, சர்க்கரை மூணையும் கலந்து ஒரு பாட்டில்ல போட்டு வைச்சுக்கலாம். எப்போது வேணும்னாலும் சுடுநீர் கலந்தா போதும். நொடியில் காஃபி ரெடி.  பாலில் தண்ணி கலந்து பாட்டியிடம் மாட்டிக் கொள்ள வேண்டாமே!” என்று காப்பி அடித்த அறிவுபூர்வமான தீர்வு ஒன்றைச் சொன்னதும் அம்மா,

“பறக்காவட்டி. இனி உனக்குக் கட்டன் காஃபிதான்” என்று சொல்லி விட்டார்.

கட்டன் காஃபி கூட நன்றாகத்தான் இருக்கும். அதுவும் எங்கள் ஊர் புகழ்வாய்ந்த கருப்பட்டிக் காஃபி, பால் கலந்தும், கலக்காமலும் என்று சுவையாகவே இருக்கும். அது போல் சுக்குக்காஃபி!

திருமணத்திற்குப் பிறகு மாமியார் வீட்டில் காஃபி ராகத்தை அடக்கிப் பாட வேண்டிய நிலை. ஆனால், சும்மா சொல்லக்கூடாது. நாகர்கோவில், திருவனந்தபுரம் காஃபி எல்லாம் விட மாமியார் வீட்டுக் காஃபி, தஞ்சாவூர்க்காரர் என்பதால், சிக்கரி கலக்காத அக்மார்க் பேஷ் பேஷ்!! கும்பகோணத்து டிகிரி காஃபி. பிறந்த வீட்டில் வேறு பல அறிவுரைகள் சொல்லித்தான் அனுப்பி வைத்தார்கள்!

மதுவிற்கு மக்கள் அடிமையாவது போல் நான் காஃபிக்கு அடிமை, குடிகாரி என்று சொல்லுவார்கள் எங்கள் வீட்டில். நான் ஒன்றும் மொடாக் குடிகாரி அல்ல. எல்லோரும் 100 மில்லி, 200 மில்லி என்று ஓரிரு முறை குடிப்பார்கள் என்றால் நான் பெக் பெக்காய் (30 மில்லி) – ஸ்மால், லார்ஜ் (60 மில்லி) (இது இந்திய அளவு) என்று 4 அல்லது 5 முறை குடிப்பேன் அவ்வளவுதான்.

மதுவுடன் காஃபியை ஒப்பிட்டுப் பேசியதை நான் வன்மையாக ஆனால் மெதுவாகத்தான் –ஹிஹிஹி-கண்டித்தேன்/கண்டிக்கிறேன். எங்கள் வீட்டு காஃபி வில்லன்கள் எல்லோரும், அவர்களின் சட்டரீதியான எச்சரிக்கை “காஃபி உடல்நலத்திற்குக் கேடு” என்பதற்கு கருத்துகளைத் திரட்டி ஆதாரம் காட்டினார்கள். நானும் என் பங்கிற்கு காஃபியினால் விளையும் நன்மைகள் என்று சுட்டி விளம்பரம் தேடினேன்.

ஆனால், அவர்கள் வெல்லவும், நானும் உதார் விட்டேன். “ஹும் இதென்ன பிரமாதம். காஃபி குடிக்காமல் இருந்து காட்டுகிறேன்” என்று சூளுரைத்தேன். 5 ஐ 4, 3, 2, 1என்று குறைத்து 0 நிலைக்கும் வந்தேன். பாவம் காஃபி பொடி, ஃபில்டர் எல்லாம் என்னை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன. 10 நாட்கள் கடந்தன. காஃபி பொடி திரிக்கும் கடையின் சொந்தக்காரர், வண்டியில் போன என்னை நிறுத்தித் துக்கம் விசாரித்தார்.

“என்ன மேடம் காஃபி குடிக்கறதை நிறுத்திட்டீங்களா”? எனக்கு ஆச்சரியம். இவருக்கு எப்படித் தெரிந்தது?

“மாசம் பொறந்து 10 தேதியாகிடுச்சு. உங்களை தினம் பார்க்கறேன். நீங்க கடைப்பக்கம் வரவே இல்லையே. அதான்!”. ம்ம்ம் என் காஃபி பிரதாபம் எங்கு வரை சென்றிருக்கிறது பாருங்கள்! அவர் அருகில் வரும்போதே காஃபிப் பொடியின் வாசம் மூக்கைத் துளைத்து மூளை ந்யூரான்களை உசுப்பேத்தியது. சூளுரை நினைவுக்கு வர, தட்டி வைத்துக் கொண்டேன்.

போதாக் குறைக்கு நவராத்திரி வந்தது. போகிற வீட்டில் எல்லாம் காஃபி (ராகம்)தான். நான் ஏதோ இதுவரை சுவைத்திராத ஒன்றைப் பார்ப்பது போல் ஏக்கத்துடன் பார்த்து, மனதிற்குள் ஒற்றையா இரட்டையா போட்டு, சாலமன் பாப்பையா அவர்களை நடுவராக வைத்துப் பட்டிமன்றம் நடத்தி, அவர் “நல்லதல்ல” என்று தீர்ப்புரைக்க, நானும் மனமில்லாமல் மறுப்பேன். இப்போது என்றால் விசு(ஆசெம்)வை எனக்கு ஆதரவாகப் பேச வைத்து வென்றிருப்பேன். தோழி உமையாள் காயத்ரியின் காஃபி ரசனை கவிதையாகி...பாருங்கள் இங்கு..

அந்த நேரத்தில், என்னுடன் சிறு வயதிலிருந்து ஒன்றாக வளர்ந்த எனது அத்தை மகன், அமெரிக்காவிலிருந்து அவனது புகுந்த(?) வீட்டிற்கு வந்திருந்தான்.

“கீதா! இன்னிக்கு ஐ வில் ஜாய்ன் யு ஃபார் எ கப் ஆஃப் காஃபி இன் த ஈவினிங்க். நல்ல ஸ்ட்ராங்க் டிக்காக்ஷன் மணக்க மணக்கப் போட்டு வை.” அவ்வளவுதான். புத்தாண்டு சபதம், குடிகாரன் சபதம் போல, மணக்க, மணக்கக் கலந்த சூடான ஸ்ட்ராங்க் காஃபியின் ஆவியில் கரைந்தே போனது. அதன் பின்...

ஒவ்வொரு பயணத்தின் போதும் ஜப்பானியப் பெண்களின் மெத்தட்தான். என் அம்மாவிடம் சொன்னது போல் கடைப்பிடித்தேன். மிகவும் பயனுள்ளதாகவே இருந்தது. ஆனால், இப்போது ரயிலின் காஃபி எனும் சுடுநீருக்குப் பழகிவிட்டேன். எப்படிப் பழகினேன்?

எல்லாம் அமெரிக்கப் பயணம்தான் காரணம். அது நடந்து 15 வருடங்கள் ஆகின்றது. அங்கிருக்கும் என் உறாவினர்கள் எல்லாம் சென்னையிலிருந்த காஃபி கடையையே கேட்க, எனக்கும் சேர்த்து வாங்கிக் கொண்டேன். அப்போது ஒருவருக்கு 2 செக்கின் பெட்டிகள்  32*2=64 கிலோ கொண்டு செல்ல அனுமதி இருந்ததால், அதுவும் நாங்கள் மூவர் பயணித்ததால், பார்த்துக் கொள்ளுங்கள், ஒரு பெட்டியின் பாதி எடை காஃபிப் பொடிதான்.

சியோலில் இருந்து ஸான்ஃப்ரான்ஸிஸ்கோவிற்குப் பறக்கும் போது ஒரு கோப்பை முழுவதும் அவ்வளவாகச் சூடே இல்லாத லைட் டிக்காக்ஷன் வைத்துவிட்டுக் கூடவே மில்க் க்ரீம் உறைகள் என்று கொடுத்தார்கள். நான் முழித்தேன். விமானப் பணிப்பெண்ணிடம் எனக்குப் பால் கலந்த காஃபி வேண்டும் என்றேன். அதற்கு அவர் அந்த க்ரீம் உறையைக் காட்டிவிட்டுச் சென்றார். இரு உறை கலந்தாலும் ஹும் கட்டன் காஃபி! மகன் என்னைப் எச்சரித்தான் இனி காஃபி இப்படித்தான் என்று! மனதைத் தேற்றிக் கொண்டேன்.


அமெரிக்காவில் காஃபி கடைகளிலும் அப்படித்தான். ஒரு கோப்பை டிகாக்ஷனை அரைக் கோப்பையாக்கி அதில் மூன்று உறை க்ரீமைக் கலந்து பார்த்தேன். ஏதோ இருந்தது. அப்படிச் செய்வதற்குள் காஃபி ஆறியே போய்விடும். அங்கு பால் கலந்த காஃபியும் சுவைத்திருக்கிறேன். வீட்டுக் காஃபி பழகிய நம் மக்களுக்கு அது பிடிக்காது எனக்கு அதுவும் பிடித்துவிட்டது! வித விதமான கோல்ட் காஃபி எல்லாம் சுவத்தாயிற்று! வீட்டிலும் செய்வதுண்டு.

Image result for american coffee

வித விதமாய்க் கிடைத்த காஃபி எல்லாம் குடித்துப் பார்க்க ஆசைப்பட்டதில், ஆவியைப் போல் டபுள் எக்ஸ்ப்ரஸ்ஸோ அனுபவமும் ஏற்பட்டது. ஆனால், என் முகம் இஞ்சி தின்ன குரங்கு போல் ஆகவில்லை! ஏனென்றால் நானே இனிமையானவள் ஆயிற்றே. சர்க்கரை சேர்க்காத டபுள் எக்ஸ்ப்ரஸ்ஸோவையும், அது கசந்தாலும் அதன் மணத்தை ரசித்துச் சுவைத்தேன்! எல்லா காஃபி வகையையும் ரசித்துச் சுவைத்தாயிற்று.

சர்க்கரை குறைவாக அல்லது சர்க்கரைச் சேர்க்கப்படாத காஃபியில்தான் அதன் உண்மையான மணம், கசப்பும் தெரியும், சுவையாகவும் இருக்கும்! இது என்னைப் போன்ற இனிப்பானவர்களுக்கு ஆதரவாகச் சப்பைக் கட்டு கட்டுவதாக நினைக்க வேண்டாம். அதுதான் உண்மை. காஃபியும் கசக்கும்! உண்மையும் கசக்கும்! ஹிஹிஹி. காஃபி(த)த்துவம்!!! தத்துப்பித்துவம்!


ஆப்பிரிக்கா - எத்தியோப்பாவில்

இப்போது தஞ்சாரா ரவுண்டு கட்டிக் கொண்டு வந்துகொண்டிருக்கின்றது. இன்னும் சுவைக்கவில்லை. இருந்தாலும் உலகிலேயே ஆப்பிரிக்காதான் காஃபிக்குப் புகழ்பெற்றது. எத்தியோப்பியாவில் காஃபி மிக மிக அருமையாக, உலகத் தரம் வாய்ந்ததாக இருக்கிறதாம். வாழ்வில் ஒரு முறையேனும் அதைச் சுவைத்திட வேண்டுமாம். ஆஹா! விட்டுவிடக் கூடாது!  அப்புறம் சொர்கத்திற்கு ஏது வழி! 

காப்பியில் அருமையான மலையாளப் பாடல் ஒன்று

இதோ என் கையில் சுடச் சுட ஆவி பறக்கும், மணக்கும் காஃபி! வாருங்கள் காஃபி பிரியர்ஸ்! சியர்ஸ்! (கீதாவின் காஃபி ஆலாபனை முடியவில்லை ஆனால் இங்கு முடிந்தது!!!)



சுப்புத்தாத்தா... பைரவி ராகத்தைத் தொட்டு அமைந்த பாடல் உங்களுக்குக் காஃபியைச் சுவைக்க....

------கீதா

படங்கள் இணையத்திலிருந்து....



18 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்களின் உடனடி வருகைக்கும் கருத்திற்கும்...

      நீக்கு
  2. காபி பற்றி இத்தனை சந்தோஷங்கள் சோகங்கள் உங்களுக்கு நடந்திருக்கிறதா..? காபி அருந்துவதால் கிடைக்கும் நன்மைப் பற்றி ஒரு தினம் ஒரு தகவல் எழுதியிருந்தேன். உங்களுக்காக தேடித் பார்த்தேன். ஆயிரக்கணக்கான தகவல்கள் மத்தியில் கிடைக்கவில்லை. கிடைத்ததும் பதிவில் வெளியிடுகிறேன்.
    அதுவரை உங்களுக்காக கருப்பட்டி காபி 3 லிட்டர் வாங்கி வைத்திருக்கிறேன். சூடாருவதற்குள் உடனே மதுரை வரவும்.
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹ்ஹஹஹ் செந்தில்...கண்டிப்பாக வந்து விடுகின்றேன்!! கருப்பட்டிக் காஃபி ரொம்பப் பிடிக்கும்!! காஃபியின் நன்மைகள் குறித்துப் பல கட்டுரைகள் வாசித்திருக்கின்றேன்...உங்கள் பதிவை வாசிக்க ஆவலாக இருக்கிறேன். கிடைத்தவுடன் பதிவிடுங்கள் சகோ...

      மிக்க நன்றி ஆர்வமுடன் கருத்திடுவதற்கு..

      நீக்கு
  3. இன்னமும் தஞ்சை நகரில் நயமான டிகிரி காஃபி கடைகள் நிறையவே உள்ளன.. ஐயங்கடைத் தெருவிற்குள் நுழையும் போதே காஃபி பொடி அரைக்கும் கடைகள்..-

    மூக்கைத் துளைத்து மூளையை உசுப்பேற்றும் வாசம்!..

    இப்போதெல்லாம் - விமான பயணத்தின் போது காஃபியை மறந்து விட்டேன்..

    ஆனாலும் - காஃபியின் பெருமையைக் கெடுப்பதற்கென்றே - நம்ம ஊர் ரயில் காஃபி!?..

    பதிலளிநீக்கு
  4. நான் புரூ காஃபி தவிர
    எந்த காஃபி யும் குடிச்சதில்லை...
    உங்கள் காஃபி பதிவ தான்
    இப்போ கடைசியா கு(ப)டித்தேன்...

    பதிலளிநீக்கு
  5. காஃபி ஆலாபனை என்பது
    அருமையான எண்ணங்களின் பகிர்வு

    பதிலளிநீக்கு
  6. சிறு வயதில் பள்ளி விட்டு வந்ததும் அம்மா காபி தருவாள் - என் வேண்டுகோளின் படி ஒரு மாம்பழச் சோம்பு போன்ற டம்ளரில்! ஒரு ஸ்பூனுடன் சாலிப் பக்கம் சென்று செட்டில் ஆகி விடுவேன். ஸ்பூனால் காபியைத் தொட்டுத் தொட்டு நாக்கில் வைத்துக் கொண்டு, அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பூனில் எடுத்து நாக்கில் விட்டு... அந்தக் கொஞ்சூண்டு காபியைக் குடிக்க அரை மணி நேரம் ஆகும்! Cold Cofee யை எல்லாம் Home made ஆக அப்போதே முயற்சித்துப்பார்த்து விட்டேனாக்கும்.

    சர்க்கரை பேருக்குத்தான் போட்டுக் கொள்வேன். கசப்புதான் காபியின் ருசி. இனித்தால் அதன் பெயர் வேறு. பாயசம்! சமீப காலங்களில் கிடைக்கும் காபிப்பொடியின் தரம் என்னைக் காபியிளிருந்து விளக்கி வைக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறது. போராடிக் கொண்டுதான் இருக்கிறேன்!

    என் அண்ணன் மகன் கொரியா சென்று வந்தபோது இந்தக் குழல் போன்ற காபி கொடுத்தான். வெந்நீர் போதும் காபி தயாரிக்க. ஆனால் எனக்கு அது பிடிக்கவில்லை. ஏனென்றால் என் நாக்கு நாலு முழம்!

    பதிலளிநீக்கு
  7. பல்வேறு சுவைகளுடன் நகைச்சுவைகளும் கலந்த அருமையான காஃபிப் பதிவு.

    //இதோ என் கையில் சுடச் சுட ஆவி பறக்கும், மணக்கும் காஃபி! வாருங்கள் காஃபி பிரியர்ஸ்! சியர்ஸ்!//

    சியர்ஸ் ..... :)

    பகிர்வுக்கு பாராட்டுகள் + நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  8. //நான் காஃபிக்கு அடிமை, குடிகாரி என்று சொல்லுவார்கள் எங்கள் வீட்டில். நான் ஒன்றும் மொடாக் குடிகாரி அல்ல. எல்லோரும் 100 மில்லி, 200 மில்லி என்று ஓரிரு முறை குடிப்பார்கள் என்றால் நான் பெக் பெக்காய் (30 மில்லி) - ஸ்மால், லார்ஜ் (60 மில்லி) (இது இந்திய அளவு) என்று 4 அல்லது 5 முறை குடிப்பேன் அவ்வளவுதான்//

    ஹாஹாஹா ஏதோ நம்ம ChivasRegal சிவசம்போ எழுதியதைப்போல் இருந்தது

    எனது அலுவகத்தில் எல்லாம் இருக்கும் அலுவலக செலவுதான் காவா, துர்க்கீஷ், காஃபி, டீ, சுலைமாணி காலையில் ஒரு நெஸ்கஃபே காஃபி இத்துடன் சிறிது டீத்தூலும் சேர்த்துக் கொள்வேன்

    இதற்கு நான் வைத்திருக்கும் பெயர் சாப்பி அதாவது சாயாவும், காஃபியும் கலந்தது பிறகு மறுநாளே...
    ஊருக்கு வந்தால் அம்மா போட்டுத்தரும் காஃபி மட்டுமே வெளியில் கடையில் குடிக்க மாட்டேன் அந்தக் காரணங்களைக் குறித்து எழுதிக்கொண்டு இருக்கின்றேன்
    முதல் காணொளி முதன் முறையாக கேட்டேன் அருமை.

    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
  9. எனக்கும் நல்ல காஃபி நான்கைந்து முறை கொஞ்சம் கொஞ்சமாக வேண்டும் காஃபிப் புராணம் செய்ய விரும்பவில்லை ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு அனுபவம்

    பதிலளிநீக்கு
  10. //சர்க்கரை குறைவாக அல்லது சர்க்கரைச் சேர்க்கப்படாத காஃபியில்தான் அதன் உண்மையான மணம், கசப்பும் தெரியும், சுவையாகவும் இருக்கும்//!yes !! அப்படியே வழிமொழிகிறேன் :)
    அண்ட் 3 in one காபி உறைகளில் பால் பவுடர் ரேஷியோ குறைவா சேர்த்திருப்பாங்க அதனால coffee mate /whitener பவுடர் ஒரு அரை தேக்கரண்டி சேர்த்தா போதும் ..இங்குள்ள இன்ஸ்டன்ட் காபி பவுடருக்கு இந்த பவுடர் வொயிட்னரை தான சேர்க்கணும் ..
    நம்மூர் பால் சுவையே அலாதி அந்த சுவை இங்கில்லை ..ஊரில் எங்க வீட்ல எப்பவும் கருப்பட்டி காப்பிதான் :) கருப்பு காபி போல் கருப்பு தேநீரும் சுவைதான் ..திருமணத்திற்கு பின் தான் முதன்முதலா குடிச்சி பார்த்தேன் ..ப்ளாக் காபி தேநீர் இரண்டுக்கும் இனிப்பு தூக்கலா இருக்கணும் ..

    பதிலளிநீக்கு
  11. எனக்குத் தெரிந்து டீதான் ஒரு செரிமோனி ஒன்று செய்து (அதில் பல நியதிகள் உள்ளன .அவற்றை ஒன்று விடாமல் ஃ பாலோ பண்ணனும் என்பார்கள் ) கடைசியில் ஒரு பெரிய கப்பில் நாம் எதிர்பார்ப் பதை விடக் குறைவான அளவே தருவார்கள் . எனது ஜப்பானியத் தோழியிடம் அவர் இந்தியாவில் இருந்தபோது கேட்டேன் . அவர்கள் ஒரு குத்து மதிப்பாகத் தான் தெரியுமே தவிர பூரணமாகத் தெரியாது என்று சொல்லிவிட்டார்கள் .அவர்களே அப்படிச் சொல்லிவிட்ட பிறகு நாம் ஏதாவது தப்பாக எழுதிவிட்டால் ..... எதற்கு வம்பு என்று விட்டுவிட்டேன்

    பதிலளிநீக்கு
  12. நேற்று ,ஒரு ஹோட்டலில் லெமன் காப்பி என்று ஒன்றைக் கொடுத்தார்கள் ,குடித்து முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது :)

    பதிலளிநீக்கு
  13. நானும் இந்த காப்பி ஆலாபனையில் கலந்து கரைந்து போனேன் என்ன சொல்லப்போகின்றாய் பாடல் போல எனக்கும் பிடிக்கும் காப்பி சீனியில்லாத பாரிஸ் காப்பி)))

    பதிலளிநீக்கு
  14. காபி மகாத்மியம் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த ஸன்ரைஸ், நெஸ்கபே மற்றும் ப்ரூ ( இது ப்ரூ … டா.. கருணாஸ்) போன்றவற்றையும் சொல்லி இருக்கலாம். உங்கள் வீட்டிற்கு வந்தால் நிச்சயம் சுவையான ஒரு கப் காபி உண்டு.

    பதிலளிநீக்கு
  15. காபி ஆலாபனை சூப்பர் சகோ. என்னுடைய கவிதையையும் குறிப்பிட்டதற்கு நன்றி.
    எகிப்தில் மூன்று விதமான காபிதூள்கள் அரைவை கடைகளில் கிடைக்கும். ஒவ்வொன்றாய் வாங்கி எது ந்ல்லா இருக்கு என்று பார்ப்பேன். அதில் ஒன்று சற்று சரிப்பட்டு வந்தது. ஆனா நம்ம காபி மணம் போல் இல்லை தான். நாக்கு இதற்கு அடிமையாகி விட்டது இல்லையா... கேட்குமா... இட்டாலியன் காபி கட்ட காப்பி போல் தான் இருக்கும் மணம் சற்று மாறு படும். எகிப்தில் தோழி ஒருவர் இந்த பவுடர் தாயாரித்து வைத்துக் கொள்வார். அப்போது இருந்து இந்த திடீர் காபி எளிதாகிற்று சில சமயங்களில்...

    விட்டா பதிவாகிடும் போல....ஹிஹிஹி

    பதிலளிநீக்கு
  16. இரண்டு பாகங்களும் ப(கு)டித்தேன்! அடேங்கப்பா! உங்கள் காபி பிரியம் பெரும் காப்பியமாய் இருக்கிறதே! எனக்கும் காபி பிடிக்கும்தான். ஆனால், இந்த அளவுக்கு இல்லை. நீங்கள் எழுவதைப் பார்த்தால் நல்ல காபி ஒன்று போட்டுக் கொடுத்து உங்கள் சொத்தையெல்லாம் எழுதி வாங்கி விடலாம் போல. நான் முன்பு காலை மாலை என இரண்டு வேளை அருந்திக் கொண்டிருந்தவன். உடல் நலம் கருதி இப்பொழுது ஒருவேளையாகச் சுருக்கிக் கொண்டேன். இடையில் இரண்டு ஆண்டுகள் ஓமியோபதி மருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் காபியை நிறுத்தியும் இருந்தேன். அந்த இரண்டு ஆண்டுகளில், இடையில் எப்பொழுதாவது காபி அருந்த நேர்ந்தால் அஃது எவ்வளவு எவ்வளவு எவ்வளவு சுவையாய் இருக்கும் தெரியுமா?!... நன்றாகத் தாகம் எடுக்கும்பொழுது தண்ணீர் குடித்தால் களக் களக் களக்கெனக் குடிப்போமே? அப்படிக் குடிக்க நேரும் அந்தக் காபியை!

    இதோ, அம்மா கூப்பிடுகிறார். காபி அருந்தத்தான். Cheers சகா!

    பதிலளிநீக்கு